2010/07/14

விழாக்கோலம் பூண்டது மாட்ரிட்

லகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் முதன்முறையாக ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால் தலைநகர் மாட்ரிட் விழாக்கோலம் பூண்டுள்ளது.மாட்ரிட் நகரின் வீதிகளில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதால் செங்கடல் போன்று காட்சியளிக்கிறது.

பட்டாசுகளை வெடித்தும் கார்களின் ஹோர்ன்களை ஒலித்தும் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகளால் ஒலியெழுப்பியும் தெருக்களில் நடனமாடியும் ஸ்பெயின் ரசிகர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.மாட்ரிட்டில் உள்ள பூங்காவில் பெரிய திரையில் இறுதி ஆட்டம் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.இதை லட்சக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.ஏராளமான ரசிகர்கள் ஸ்பெயினின் தேசியக் கொடியை தங்கள் முகத்தில் வரைந்தனர்.சிவப்பு நிற சட்டைகளையும் அணிந்திருந்தனர்.

வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைநகர் மாட்ரிட்டில் குவிந்துள்ளனர்.பாதுகாப்புப் பணிகளுக்காக 2000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.மாட்ரிட்டின் முக்கிய வீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஸ்பெயினின் ரசிகர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

ஸ்பெயினின் பிரதமர் லூயிஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.ஆருடம் கணித்த ஆக்டோபஸ் பொம்மைகளையும் ரசிகர்கள் கையில் வைத்திருந்தனர்
.(தினக்குரல் செய்தி)

உலகைக் கவர்ந்த வினோத 'சோதிடன்' _
வீரகேசரி இணையம் 7/13/2010
_
லகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் சிறந்த நட்சத்திரமாகக் கருதப்பட்டவர்.... ஒரு நிமிடம் கூட விளையாட்டுத் திடலில் கால்பதிக்காதவர்... ஆனால் எந்த அணி தகுதி பெறும் என்பதை அச்சொட்டாகக் கணித்துக் கூறுபவர்...

யார் இவர்....?

எல்லோரும் இவரைப் பற்றியே பேசுகின்றனர். அவர் தான் 'போல்' எனும் ஒக்டோபஸ்.

கிளி ஜோசியமல்ல

நாம் அறிந்தது கிளி ஜோசியம். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் 'ஒக்டோபஸ்' ஜோசியம் கொடிகட்டிப் பறக்கின்றது.

ஒக்டோபஸ் சொல்லும் விடயங்களை நம்புவதற்குக் காரணம், அதற்கு ஒன்பது மூளைகளும் மூன்று இதயங்களும் இருப்பதனால் தானோ?

ஜேர்மனியில் உள்ள ஒபர்ஹோசன் நீரியல் பூங்காவில் உள்ள இந்தப் ' போல்' , உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்பதைத் துல்லியமாக கணித்துக் கூறியது. அதன் கணிப்பும் உண்மையானது.

அதன் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போமா?

' போல்' 2008 ஆம் ஆண்டு டொரஸ்ட்டில் உள்ள வெய்மத் எனும் இடத்தில் பிறந்துள்ளது.

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் தனது கணிப்பைக் கூறி அதில் பிரபலமடைந்துள்ள ' போல்' தற்போது ஓய்வு பெறப்போவதாக அறிவிக்கப்படுகிறது.

தான் எதை சரி என நினைக்கிறதோ அதைச் செய்யும் இந்த ஒக்டோபஸ் ஓய்வின் பின்னர் தன்னைப் பார்வையிட வரும் சிறுவர்களுடன் விளையாட ஆசைப்படுவதாக நீரியல் பூங்காவின் பேச்சாளர் தன் ஜா முன் ஜிக் தெரிவித்துள்ளார்.

நீரியல் பூங்காவின் தலைமை அதிகாரி டேனியல் பெய் கூறுகையில்,

"போல் தன்னைப் பார்க்க வரும் விருந்தினர்களைக் கண்டவுடன் வழமைக்கு மாறாகச் செயல்படும். ஆதலால் அதனுடைய தனித்திறமை என்னவென்பதை கண்டறிய முயற்சி செய்கின்றோம்" என்கின்றார்.

போலுக்கு இரண்டு டுவிட்டர் எக்கவுண்டும் ஒரு வலைப்பதிவும் உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

உலகக் கிண்ணத் தொடரில் ஜேர்மனி அணி பங்கு பற்றிய 6 போட்டிகளின் முடிவுகளையும் சரியாக இது எதிர்வு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் ஜேர்மனி தோல்வியுறும் என ஒக்டோபஸ் எதிர்வு கூறிய பின், ஸ்பெய்னிடம் ஜேர்மனி தோல்வியுற்றது. இதனால் ஜேர்மனி அணி ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

கொலை அச்சுறுத்தல்

இந்த ஒக்டோபஸை பழிவாங்கத் துடிக்கும் ஜேர்மன் கால்பந்தாட்ட அணி ரசிகர்களிடமிருந்து கொலை அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருகின்றனவாம்.

அது மட்டுமல்ல.

ஸ்பெயின் அணி உலகக் கிண்ணத்தை வெல்லும் என சரியாகக் கணித்துக் கூறியமையினால் ஸ்பெயின் அணி வீரர்கள், உலகக் கிண்ணம் போன்ற வடிவத்தில் ஒரு நினைவுச் சின்னத்தை ஒக்டோபஸுக்கு வழங்கி அதனை கௌரவப்படுத்தியுள்ளனர் என்றால் அதன் மகிமையை என்னென்பது?

-எம்.எப்.சில்மியா

No comments: